கெட்ட காலமான இந்தியாவின் எதிர்காலம்!

2019-20 நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5.1 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்று கிரிசில் நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.


ஒரு ஆண்டுக்கும் மேலாகவே நாட்டின் வளர்ச்சி வீழ்ச்சிப் பாதையை நோக்கிப் பயணித்துக்கொண்டிருப்பதாகப் பல்வேறு பொருளாதார நிபுணர்களும், ஆய்வு நிறுவனங்களும் கூறிவருகின்றன.


அதற்கேற்றாற்போல, இந்த ஆண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாகக் குறைந்தது.


அதற்கடுத்த ஜூலை - செப்டம்பர் காலாண்டிலும், இந்த முழு நிதியாண்டிலும் வளர்ச்சி விகிதம் 4.5 சதவீதம் வரையில் மட்டுமே இருக்கும் என சர்வதேச ஆய்வு நிறுவனங்கள் எச்சரித்திருந்தன.


அதை உண்மையாக்கும் வகையில் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் மிக மோசமாக 4.5 சதவீத வளர்ச்சியை மட்டுமே இந்தியா எட்டியிருந்தது.


இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5.1 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்று ஆய்வு நிறுவனமான கிரிசில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


இதற்கு முன்னர் கிரிசில் வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில் 6.3 சதவீத வளர்ச்சியை இந்தியா கொண்டிருக்கும் என்று தெரிவித்திருந்தது.


பொருளாதார வளர்ச்சி நலிவடைந்துள்ள நிலையில், ரெப்போ வட்டி விகிதக் குறைப்பு குறித்து டிசம்பர் 3-5 தேதிகளில் நடைபெறவுள்ள நாணயக் கொள்கைக் கூட்டத்தில் மத்திய ரிசர்வ் வங்கி ஆலோசிக்கவுள்ளது.


முன்னதாக ஜப்பானின் நோமுரா வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில், 4.7 சதவீத வளர்ச்சி மட்டுமே இருக்கும் என்று எச்சரித்திருந்தது.